ஓரிரு நாளில் வடகிழக்குப் பருவ மழை துவங்குமாம்...! கடந்த வருடங்களைப் போல் மிதக்கப் போகிறதா சென்னை?
ஓரிரு நாளில் வடகிழக்குப் பருவ மழை துவங்குமாம்...!
இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்குப் பருவ மழை துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய வானிலை நிலவரப்படி, நாளை அதாவது அக்.24ம் தேதியும் மறுநாளும் தென்மேற்குப் பருவ மழை விலகி, அடுத்த நாள் முதல் வடகிழக்குப் பருவ மழை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை தென்படுகிறது. இதுவரை பெய்த மழை அளவுப் படி, கடலூரில் 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் ஓரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார் பாலசந்திரன்.
இனி வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையால் பெரும் மழைப் பொழிவு சென்னையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த வருடங்களில், வரிசையாக இதே நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் சென்னை பெரும் துயரத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.