no power to oppose the nuclear power states
அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக மின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை வகித்தார். இதில் தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். அப்போது, அணு உலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் , தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது என்றும் மத்திய அரசின் ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனம், தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது என்றும் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலையில் உள்ள 3 மற்றும் 4 ஆம் உலைகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் முழுமையாக தமிழகத்திற்கு வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
அதே நேரத்தில் அணு உலைகள் எதிர்க்கும் மாநிலங்களுக்கு, அதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மூன்று மாதங்களூக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்ற நடைமுறையை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
