தேவி தியேட்டர், உட்லேண்ட்ஸில் இரவு காட்சிகள் ரத்து!! சென்னை சாலைகள் வெறிச்சோடின
தேவி, உட்லேண்ட்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தேவி, உட்லேண்ட்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறியது. எனினும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்த நிலையில், இன்று மீண்டும் மோசமடைந்துள்ளது. வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். கடந்த வாரத்தை போலவே மீண்டும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனைக்கு தொண்டர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
சற்று முன்னதாக மருத்துவமனையிலிருந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில், காவேரி மருத்துவமனையிலிருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அடுத்த அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்போடு தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் காத்துக்கிடக்கின்றனர்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள காய்கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் அதிகமான அளவில் காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இந்நிலையில், தேவி தியேட்டர், உட்லேண்ட்ஸ் தியேட்டர் உள்ளிட்ட சில தியேட்டர்களில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையின் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் காவேரி மருத்துவமனை பகுதியில் திமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்துவருவதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படும் வேளையில், மற்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.