சு.சாமியை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையை எரிக்க முயன்றாதால் பரபரப்பு...
திருச்சி
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியை கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியை கண்டித்து திருச்சியில் நேற்று புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார்.
அப்போது கட்சியினர் கையில் பிடித்திருந்த சுப்பிரமணியசாமியின் முழு உருவப்படத்தை எரிக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட காவலாளர்கள் அவர்களை தடுத்து உருவப்படத்தை கைப்பற்றினர். அப்போது காவலாளர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் 25 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.