"சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா?" - நியூஇந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் விளக்கம்
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ஆய்வு செய்தால்தான் இழப்பீடு குறித்து கூற முடியும் என நியூ இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரிர் உஸ்மான் சாலையில் உள்ள பிரமாண்டமான ஜவுளி கடையான தி சென்னை சில்க்ஸில் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மின்கசிவு காரணமாகதான் இந்த தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு நாட்கள் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதை தொடர்ந்து கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை சுவர் திடீர் என இடிந்து விழுந்தது.
மேலும் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் முற்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீயை அணைக்க ஏரளாமான தண்ணீரும் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. தீயை அணைப்பதற்கான செலவை கட்டிடத்தின் நிர்வாகம் தான் தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கபட்டிருந்தது.
அதைதொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டிட தீயை அணைக்க தண்ணீருக்கான செலவு 30 லட்சம் ரூபாய் எனவும், அந்த பணம் அரசுக்கு செலுத்தப்பட்டு விட்டதாகவும் சென்னை சில்க்ஸ் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், விதிமீறி கட்டபட்டிருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிப்பதற்கான வேலைபாடுகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று இடிந்த கட்டிடத்தின் பகுதிகளை ஆய்வு செய்ய நியூ இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் திநகர் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ஆய்வு செய்தால்தான் இழப்பீடு குறித்து கூற முடியும். விதி மீறல்கள் பற்றி இறுதி கட்ட ஆய்வு அமர்வில் தான் முடிவு செய்யப்படும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டிடத்தை ஆய்வு செய்ய காவல்துறை அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.