சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சென்னை வடபழனியும் ஒன்று. அதுவும் வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு வரும் போது, 100 அடி சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூராக இருக்கும்.
இத்தனைக்கும் அவ்வழி ஒரு வழி பாதையாக மாற்றிய அமைக்கப்பட்டாலும், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை.
இதனையடுத்து, வடபழனி 100 அடி சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் மேல்பட்ட ரயில் பாதைக்கு கீழ், மேம்பாலம் ஒன்று கட்டும் பணி தொடங்கியது.

கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்த இந்த புதிய மேம்பாலப் பணிகள் முடிந்த போதும் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படாமல் இருந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த இடத்தில் அமைந்துள்ள மேம்பாலம் திறந்துவிடப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி எதுவும் நடைபெறாமல் இன்று காலை முதல் பொதுமக்கள் அந்த மேம்பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் வடபழனி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
