தஞ்சாவூர்,

விமானம் மூலம் தமிழகம் வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் வினியோகிக்கப்படவில்லை. வங்கியும், ஏ.டி.எம். மையங்களும் 2000 ரூபாய் நோட்டை தருவதால் சில்லறை தேடி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு, இந்தியா முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதற்கு பதில் புதிய 2000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.

மேலும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை முதலில் ரூ.4 ஆயிரம் வரை மட்டும் மாற்றிக்கொள்ளலாம் எனவும், பின்னர் அது 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

புதிய 500 ரூபாய் நோட்டுகள் 25-ஆம் தேதி முதல் அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம்களில் கிடைக்கும் என்று கூறி, விமானத்தின் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இன்னும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.

தஞ்சையிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து வந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சில ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே செயல்படுகிறது. அந்த மையங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருவதால் மக்கள் அதனை மாற்றுவதற்கு மிகவும் அவதிப்படுகிறார்கள்.

மேலும் பேருந்து, இரயில் நிலையம், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள் மற்றும் மின்கட்டணம் செலுத்தும் இடங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நேற்றுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினர். மின்கட்டணம் செலுத்தும் இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பெரும்பாலான வங்கிகளில் பணத்தட்டுப்பாடு காரணமாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு பிறகு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை செலுத்துவதற்கு கூட்டம் அலைமோதியது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்த வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒரு வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் வரை வங்கிகளில் பணம் எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ள போதிலும் பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் பணம் பெறுவதற்கும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு ஏ.டி.எம். மையங்களும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் மட்டுமே பணத்தை டெபாசிட் செய்வதால் அங்கு கூட்டம் இன்றி காணப்பட்டது. மேலும் தபால் நிலையங்களில் உடனடியாக கணக்கு தொடங்கி பணத்தை டெபாசிட் செய்யலாம் எனவும், பணத்தை பெறுவதற்கு உடனடியாக ஏ.டி.எம். கார்டும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தபால் நிலையங்களில் புதிய கணக்குகளை தொடங்கி ஏ.டி.எம். கார்டுகளை பெற்றனர்.

புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தால் பணம் தட்டுப்பாடு படிப்படியாக குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.