நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவிற்காக 1300 அடி நீளமுள்ள புதிய வடக்கயிறுகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தேர் திருவிழாவின்போது வடக்கயிறு அறுந்ததையடுத்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லை நெல்லையப்பர் சுவாமி திருத்தேருக்காக 1300 அடி நீள புதிய வடக்கயிறு வாங்கப்பட்டுள்ளது. கடந்த திருவிழாவின்போது தேர்வடம் அறுந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் இந்த புதிய வடம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் பவனி வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர் திருவிழாவின்போது, சுவாமி நெல்லையப்பர் தேரை இழுக்கும்போது எதிர்பாராதவிதமாக வடக்கயிறு அறுந்து விழுந்தது. இதனால் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது. உடனடியாக மாற்று வடக்கயிறு வரவழைக்கப்பட்டு தேர் பவனி தொடர்ந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து, புதிய மற்றும் வலிமையான வடக்கயிறு வாங்க அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கன்னியாகுமரி மத்திய கூட்டுறவு தேங்காய் நார் நிறுவனத்திற்கு புதிய வடக்கயிறு தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

மொத்தமாக 1300 அடி நீளம் கொண்ட ஆறு வடக்கயிறுகள் தற்போது நெல்லையப்பர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா இதனைப் பெற்றுக்கொண்டு ஆய்வு செய்தார். சுவாமி நெல்லையப்பர் திருத்தேருக்கு 25 அங்குல விட்டத்தில் நான்கு தென்னை நார் வடக்கயிறுகளும், காந்திமதி அம்பாள் திருத்தேருக்கு 19 அங்குல விட்டத்தில் இரண்டு தென்னை நார் வடக்கயிறுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

தற்போது இந்த வடக்கயிறுகளுக்கு இரும்பு வளையங்கள் பொருத்தும் பணி உள்ளிட்ட இதர வேலைகள் நடைபெற உள்ளன. புதிய வடக்கயிறுகள் மூலம் வரவிருக்கும் ஆனித் திருவிழா தேரோட்டம் பாதுகாப்பாகவும் விமரிசனமாகவும் நடைபெறும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.