Neera cool drinks
சக்கைப் போடு போடும் நீரா இயற்கை குளிர்பான விற்பனை…துள்ளிக் குதிக்கும் தென்னை விவசாயிகள்…
தென்னை மரத்திலிருந்து இறக்கி விற்பனை செய்யப்படும் இயற்கை குளிர் பானமான நீரா, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக நல்ல சுவையுடன் கிடைக்கும் இந்த நீரா பானம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இயற்கை பானமான நீராவை, தென்னை மரத்தில் இருந்து இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது.
இதையடுத்து விவசாயிகள் தென்னை மரங்களில் இருந்தது நீரா இயற்கை பானத்தை இறக்குமதி செய்து தமிழக தென்னை வாரியத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பானம் இயற்கையாகவும், நல்ல சுவையுடனும் இருப்பதால் பொது மக்கள் இதனை விரும்பி அருந்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரத்திலிருந்து அதிக அளவில் நீரா பானங்கள் இறக்கப்படுகின்றன.
இதனிடையே பனை மரங்களில் இருந்தும் நீரா பானங்கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் ஒரு பனை மரத்தை வெட்டினால் அது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறினார்.

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்தது கிடைக்கும் இயற்கை பானமானா நீரா குறித்து தற்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் நல்லசாமி கூறினார்.
