ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் – 80 கிராம மக்கள் தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் எனவும், கூறி இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 12 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தரப்புகளும், இளைஞர்களும், சினிமா பிரபலங்களும் இந்த திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் மாணவர்களும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெடுவாசலில் 80 கிராம மக்கள் சேர்ந்து இன்று ஆலோசனை நடத்தினர். இதில் போராட்டத்தை ஒவ்வொரு கட்டமாக எடுத்து செல்ல கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை அறவழி போராட்டம் தொடரும் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், அனைத்து வீடுகளிலும் கருப்பு கோடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது,
அனைத்து விடுகளிலும் அகல் விளக்கு ஏற்றும் போராட்டம்,
நெடுவாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது,
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்ப வேண்டுவது,
ஆதார் உள்ளிட்ட அட்டைகளை அரசிடம் திருப்பி அளித்து போராட்டம் நடத்துவது,
என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடத்துவதாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.