ரஜினி சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகள் திமுகவினர்தான்...! - நமது அம்மா நாளிதழ்
தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விட்டு நேற்று சென்னை திரும்பிய ரஜினி, பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக பேட்டி அளித்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ள நிலையில், நமது அம்மா நாளிதழ் வரவேற்றுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறினார். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டதாகவும், சமூக விரோதிகளை ஜெயலலிதா ஆட்சியின்போது எப்படி ஒடுக்கப்பட்டு வைத்திருந்தார்களோ அதேபோன்று இந்த அரசும் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார். போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் ரஜினி கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினி உண்மையை பேசியிருப்பதாக கூறி அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் வரவேற்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
அம்மா நாளிதழில், தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனசாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதலமைச்சரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான். பிரச்சனைக்கு ராஜினாமா முடிவல்ல என ரஜினி கூறியிருப்பது பதவி ஆசை உள்ள தலைவர்களுக்கு சரியான பாடம். வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.