Nagai to Sri Lanka ferry shipping: நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேஷன் துறைமுகத்திற்கான கப்பல் போக்குவரத்தில் கட்டணம் குறைப்பு, புதிய சுற்றுலா பேக்கேஜ்கள் அறிமுகம். 

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேஷன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

கப்பல் கட்டணம் குறைப்பு

இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவனத் தலைவர் நாகையில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இரு நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணம் ரூ. 8,500ல் இருந்து 8000 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை ஏழு கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உள்ளோம். 

சுற்றுலா பேக்கேஜ்

இது தவிர ரூ.15,000க்கு இரண்டு இரவு பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாகப் பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேக்கேஜ் திட்டத்தில் இரு வழி பயண கட்டணம், தங்கும் வசதி ,போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றார்.

இனி வடகிழக்கு பருவமழை காலங்களிலும் இயக்கப்படும்

மேலும் பேசிய அவர் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி வாக்கில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது. அதுபோல் மே இரண்டாவது வாரத்தில் இரண்டாவது கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதி உள்ளதாகவும் தெரிவித்தார். இயல்பாக வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் இந்த இரண்டாவது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையுடன் கூடிய தரத்தில் இந்த இரண்டாவது கப்பல் இயக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.