வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது . அதற்கு நாடா என பெயரிடப்பட்டுள்ளது . இது கடலூர் அருகே 2 ஆம் தேதிக்கு மேல் கரையை கடப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நாளை காளை முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை , வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இதற்கு நாடா புயல் என பெயரிடப்பட்டுள்ளது. அது தென் மேற்கு வங்கக்கடலில் புதுச்சேரிக்கு தென்.கிழக்கே 730 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
அது வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது . அது தமிழ்நாட்டு கடலோர பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இது வேதாரண்யம் புதுச்சேரி இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நாளை காலை முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் சில நேரம் அதிக கனமழையாகவும் இருக்கும். 2 ஆம் தேதிக்கு மேல் கடலூர் அருகே கரையை கடக்கலாம் .
இதனால் நாளை (டிச.1) காலை முதல் நாகையிலிருந்து சென்னை வரையிலான கடலோர மாவட்டங்கள் கனமழையை சந்திக்கும். டிச 1 அல்லது 2 ஆம் தேதி புயல் கடலூரை நோக்கி போகும். அந்த நேரத்தில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடலோர மாவட்டங்கள் அதிக மழையை சந்திக்கும். கடந்த ஆண்டு டிச 1 பெய்த பேய் மழையை நினைத்து இந்த ஆண்டும் அதுபோல் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்று யாராவது வதந்தி கிளப்பினால் நம்ப வேண்டாம். அது போன்று எதுவும் நடக்காது. அதிகமான மழை இருக்கும். சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் கடுமையான் மழை இருக்கும்.
கடலூர் பாண்டிச்சேரியிலும் கடுமையான மழை இருக்கும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் . டிச . 2 அன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை இருக்கும் . 2 மற்றும் 3 தேதிகளில் புயல் அரபி கடலை நோக்கி நகரும் இதனால் கோவை , நீலகிரியில் , குன்னூரில் அதிக அளவு மழை இருக்கும்.
சென்னையில் நாளை அதிகாலை முதல் கனமழை இருக்கும் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படலாம் .
