ஸ்னாக்ஸ், கூல்டிரிங்ஸ்க்கு ’பர்ஸை’ காலி பண்ணும் தியேட்டர்கள் – இருந்தால் என்ன…? மூடினால் என்ன…? - ஆதங்கத்தை கொட்டிய ரசிகர்கள்…
தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லும்போது ஒரு குடும்பம் என்று எடுத்து கொண்டால் 1000 க்கு மேல் செலவாகிறது. ஆனால் வெளியே இருந்து ஒரு தண்ணீர் பாட்டில் கூட எடுத்து செல்ல விடாமல் உள்ளே தின்பண்டங்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கும் தியேட்டர்கள் இருந்தால் என்ன மூடினால் என்ன என்று சினிமா ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி என்ற புதிய வரி விதிப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தி பல்வேறு தரப்பினரிடையே கடுப்பை சம்பாதித்துள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீது30%கேளிக்கை வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது,நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் இந்த வரியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்க சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதை கண்டித்து இன்று முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திரையரங்குகளை நிரந்தரமாக மூட வேண்டும் என சினிமா ரசிகர்கள் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ரசிகர் ஒருவரிடம் கேட்டபோது அவரது ஆதங்கத்தை வெளியே கொட்டினார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு சென்றால் கார் பார்க்கிங்கிற்கு 120 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரையிலும் பைக் பார்க்கிங்கிற்கு 60 முதல் 90 ரூபாய் வரையிலும் வசூலிக்க படுகிறது.
இதை தவிர்த்து உள்ளே செல்லும் முன் தீவிரவாதி போல் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை முழுவதுமாக பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுப்புகின்றனர்.
இதில் சில கட்டுப்பாடுகள் வேற வைத்துள்ளனர். வெளியில் இருந்து தின்பண்டங்கள் ஏதும் தப்பி தவறி கூட எடுத்து செல்லக்கூடாது. அதற்காகவே இந்த சோதனை நடவடிக்கை.
மேலும் தியேட்டர்களின் டிக்கட்டுகளை விட தின்பண்டங்களுக்கு ஆகும் செலவு இவ்வளவுதான் என சொல்ல முடியாது. அவ்வளவு அநியாயம் செய்கின்றனர்.
வெளியில் 20 ரூபாயிற்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில் தியேட்டர்களில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் 10 ரூபாய் பாப்கான் 30 ரூபாய்க்கும் ஒவ்வொரு தின்பண்டங்களுக்கும் 20 ரூபாய் அதிகமாக விற்கப்படுவதே தியேட்டர்கள் வழக்கம்.
இவ்வாறு கொள்ளையடிக்கும் தியேட்டர்களுக்கு அதிக வரி விதிப்பதில் என்ன தவறு இருக்கிறது.
இவர்களின் அநியாய போக்கிற்கே இதுபோன்ற சோதனைக்கு இவர்கள் ஆளாகி வருகின்றனர். படம் பார்க்க வில்லை என்றால் மக்களுக்கு லாபம் தான். ஆனால் இவர்கள் தியேட்டர்களை இழுத்து மூடியுள்ளதால் அவர்களின் குடும்பம் தான் கஷ்டத்திற்கு ஆளாகும்.
தியேட்டரில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கு முதலில் இவர்கள் பணத்தின் விலையை குறைக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று கொள்ளையடிக்கும் தியேட்டர்களை நிரந்தரமாக மூட வேண்டும். அவர்களுக்கு புண்ணியமாக போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.