கடனால் நின்ற முத்துராமலிங்கம் – திரையிட தடை விதித்து உயர்நீதிமன்றம் ‘அதிரடி’
வாங்கிய கடனை திருப்பி தராததால் முத்துராமலிங்கம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்துள்ள படம் முத்துராமலிங்கம். ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், 'தெற்கு தேச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும் பொன் தங்கமடா' என்ற பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ளார். இப்பாடலினை கமல் பாடியுள்ளார்.
இந்நிலையில், முத்துராமலிங்கம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இந்த படத்திற்காக எம்.வி.பிரகாஷிடம் தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ் ரூ.29 லட்சம் கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடனை திருப்பி தரவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் எம்.வி.பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடனை திருப்பி தரும் வரை முத்துராமலிங்கம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.