வராக் கடன்களை வசூல் செய்ய கடும் சட்டம் இயற்ற வேண்டும் - வங்கி ஊழியர்கள் சங்கம் தீர்மானம்…
நாமக்கல்
வராக் கடன்களால் வங்கித் துறை பெரும் பாதிப்பை சந்திப்பதால் இதனைத் தடுக்க வராக் கடன்களை வசூல் செய்ய கடும் சட்டம் இயற்ற வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு மற்றும் இளைஞர் மாநாடு நாமக்கல்லில் நேற்று நடைப்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் தலைமைத் தாங்கினார். மாவட்டத் தலைவர் பெ.பிரகாரன் வரவேற்றார். ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகி த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.
தமிழ்நாடு அரசு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஈ.அருணாசலம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க துணைப் பொதுச் செயலர் எம்.ஏ.சினிவாசன், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் பி.விஜயாள், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கச் செயலர் ஜி.வைரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“வங்கித் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரால் எடுக்கப்பட்டு வரும் சீர்குலைவு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வங்கிகள் இணைப்பு, வங்கிகள் தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
அனைத்து தனியார் மற்றும் கிராம வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு வங்கி சேவை அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
வராக் கடன்களால் வங்கித் துறை பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இதைத் தடுக்கும் வகையில், கடன்களை வசூல் செய்ய கடும் சட்டம் இயற்ற வேண்டும்.
கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.