வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே நேற்றிரவு சாலையில் நடந்து சென்ற அதிமுக பிரமுகரின் அண்ணன் மகன் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் வசித்தவர் இளங்கோவன். இவர் அப்போதைய அதிமுக பிரமுகர். மேடையில் ஆவேசமாக பேசுவதால் இடிமுரசு இளங்கோவன் என அழைக்கப்பட்டார். இவரது அண்ணன் சந்திரசேகர் . இவரும் வியாசர்பாடி ,பக்தவச்சலம் காலனியில் வசிக்கிறார்.

இவரது மகன் பழனி (26). அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர் . 2 கொலை வழக்குகள் உட்பட 7 வழக்குகள் இவர் மீது உள்ளன . நேற்றிரவு இரவு 10 மணி அளவில் , ஜீவா ரயில் நிலையம் அருகே பழனி நடந்து வந்து கொண்டிருந்தார். ஸ்டீவன்சன் சாலையில் நடந்து வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் பழனியை வழி மறித்து சரமாரியாக வெட்டியது.
இதில் தப்பி ஓடமுயன்ற பழனி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார் , அவரை வெட்டி சாய்த்துவிட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியது. உயிருக்கு போராடிய பழனியை அங்குள்ளவர்கள் மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனி சிகிச்சை பலனின்றி பலியானார்.
பழனியை வெட்டிய கும்பல் பற்றி இதுவரை தகவல் தெரியவில்லை .பழனி அடிதடி கொலை கேஸ் என்று வலம் வந்ததால் முன்பகை இருக்கலாம் அதனால் பழனிக்கு ஆகாதவர்கள் அவரை வெட்டி கொன்றிருக்கலாம் என தெரிகிறது . இது பற்றி வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
