சென்னையில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
சென்னையில் கூவம் ஆற்றுக் கரையில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் பட்டு என்கிற பார்த்திபன். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமைதான் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பார்த்திபனுடன் சிலர் மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து இன்று காலை பார்த்திபன் அதே பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.