ஏழு ஆண்டுகளாக மக்களின் நோயைப் போக்கிவந்த போலி மருத்துவர் கைது; படித்தது எம்.எஸ்.சி பார்த்தது எம்.பி.பி.எஸ் வேலை…
ஈரோடு
ஈரோட்டில் எம்.எஸ்.சி படித்துவிட்டு ஏழு ஆண்டுகளாக கிளினிக் நடத்தி மருத்துவம் படித்து வந்த போலி மருத்துவரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் கனகாசலகுமாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்தி வருவதாக தெரிந்தது.
இதனை விசாரிக்க மருத்துவர் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள கிளினிக்கிற்கு நேற்றுச் சென்று சோதனை நடத்த இணை இயக்குநர் உத்தரவிட்டார்.
அப்போது, ஈரோடு மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (41) என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வந்ததும், அவர் எம்.எஸ்சி., பி.எட் படித்து இருந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சக்திவேலை மருத்துவக் குழுவினர் பிடித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சக்திவேலிடம் காவல் ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தியதில் சக்திவேல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இதனால் மருந்துகளின் விவரங்களை தெரிந்து கொண்ட அவர் தனியாக கிளினிக் வைத்து நடத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சக்திவேலை காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஈரோடு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.