"வெளியே என்னவோ அதேதான் உள்ளேயும்" - தியைரங்குகளில் உணவு பொருட்கள் விற்பனை குறித்து அபிராமி ராமநாதன்!
திரையரங்குகளில் எம்.ஆர்.பி. விலையின்படியே அனைத்து உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையார் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறினார்.
திரையரங்குகளில், பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் கேண்டினில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.
பொதுமக்கள் தண்ணீர் கொண்டு செல்ல திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் அம்மா தண்ணீர் பாட்டில்களும் உள்ளே விற்கப்பட வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.
அபிராமி ராமநாதன், செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், திரையரங்கு உரிமையாளர் சங்கம் கேட்டதை அரசு கொடுத்துவிட்டது என்றும் அதனால் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கத் தேவையில்லை என்றும் கூறினார்.
திரையரங்குகளில் பார்கிங் கட்டணம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது; எனவே அது பற்றி பேச முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
திரையரங்கில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் எம்.ஆர்.பி. விலைப்படியே விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அதிகபட்ச விலையைவிட கூடுதலாக விற்றால் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பு செலவு குறைந்தால்தான் திரையுலகம் முடங்காமல் இருக்கும். சிறிய படமாக இருந்தால் கட்டணத்தை குறைத்து வசூலிப்போம். தண்ணீர் பாட்டிலில் என்ன விலை உள்ளதோ அதே விலையில் திரையரங்கில் விற்பனை செய்யப்படும் என்றும் அபிராமி ராமநாதன் கூறினார்.