இரண்டு வருடங்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் மலை கிராம மக்கள்; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்....
தேனி
தேனியில் இரண்டு வருடங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் தவிக்கும் மலை கிராம மக்கள் குடிநீர் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் க.மயிலை ஒன்றியம், ஆத்தங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திராநகர் பகுதியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொங்கி எழுந்த மக்கள், தங்களுக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், ராஜேந்திரா நகரில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் மனு அளிக்க கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவல் துறையினர் மறுத்ததால், கிராம மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அதன்பின்னர், கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவலாளர்கள், மக்கள் சார்பில் நால்வர் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க செல்ல அனுமதித்தனர்.
கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.