வெடிவிபத்தில் மகன் இறந்த சோகம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை; துக்கத்தில் மூழ்கிய கிராமம்...
திருவண்ணாமலை
திருவண்ணமலையில் வெடிவிபத்தில் மகன் இறந்த சோகம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் கிணறு ஆழப்படுத்தும் பணியில் கெங்கனந்தல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் சீத்தாராமன், தங்கராஜ், குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வெடிவிபத்தில் சீத்தாராமன் இறந்ததால் அவருடைய தாய் சரோஜா (66) மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
மனவேதனை தாங்க முடியாமல் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்த சரோஜாவை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது உடலை கெங்கனந்தல் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வேட்டவலம் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகன் இறந்த சோகம் தாங்காமல் தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.