உயிர விட நிலமே பெரிசு! மண்ணெண்ணெய் எடுத்துக்கிட்டு ஆட்சியர் அலுவலகம் சென்ற தாய் - மகள்!
சொத்து பிரச்சனை காரணமாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாய் - மகள் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், பழங்காநத்தம், பைகாராவை சேர்ந்த மீனாட்சி (41) என்பவர், தனது மகள் நர்மதாவுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மதியம்12.15 மணியளவுக்கு வந்தார். அப்போது, அவர்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றனர்.
உடனே அருகில் இருந்த போலீசார், அதனை தடுத்து நிறுத்தி, அவர்களை காப்பாற்றியுள்ளனர். மேலும் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் போலீசார் தடுத்தனர்.
தற்கொலைக்கு முயன்றது ஏன் என்று போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். குடும்ப சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மீனாட்சி கூறியுள்ளார்.
மீனாட்சியின் மகள் நர்மதா (20), கூறும்போது, எனக்கு திருமணமாகி கொடுக்க வேண்டிய வரதட்சணைக்காக எங்களுக்கு சேர வேண்டிய நிலத்தை எனது பெரியப்பா அரிராமன் தர மறுப்பதாக கூறினார். எனது தந்தை காலமாகிவிட்ட நிலையில், சித்ரா என்ற நபரின் மூலமாக அரிராமன் என் மீதும், தாயார் மீனாட்சி மீதும் தாக்குதல் நடத்துகிறார் என்றார்.
எங்களுக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் நிலம், பெரியப்பாவிடம் உள்ளது. அதனை மீட்டுத்தர கோரி மதுரை ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனம் நொந்த நிலையில் இந்த தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டோம் என்று நர்மதா கூறினார்.
இதையடுத்து மீனாட்சி, நர்மதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து குடும்பத்துடன் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.