தாயும், பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு; மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே காரணம்...
தருமபுரி
பிரசவத்தின்போது தாயும், சிகிச்சை பராமரிப்பின்போது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்று கணவன் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ளது ஏலகிரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகள் கோகிலா (21). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நடப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இதனையடுத்து கர்ப்பமடைந்த கோகிலா பாப்பாரப்பட்டி அருகே உள்ள வத்திமரதஅள்ளி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கோகிலா. அங்கு கடந்த 6-ஆம் தேதி அதிகாலை கோகிலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரை பிரசவ அறைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு கோகிலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், கோகிலாவிற்கு இரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனளிக்காமல் கோகிலா உயிரிழந்தார்.
வத்திமரதஅள்ளி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் கோகிலாவை பரிசோதித்தபோது செவிலியர்கள் அலட்சியமாக இருந்தனர் என்றும் அதனால்தான் பிரசவத்தின்போது கோகிலாவிற்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றும் கோகிலாவின் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தர்மபுரி நகர காவலாளர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே தாயை பிரிந்து தனிமையில் இருந்த அந்த பெண் குழந்தைக்கு தருமபுரி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்தப் பெண் குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பதட்டத்தின் உச்சத்திற்கே சென்ற கோகிலாவின் கணவன் கோவிந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
"பெண் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்த தருமபுரி மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனைவி மற்றும் குழந்தையை இழந்து வாடும் கோவிந்தசாமிக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்ற இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து உறவினர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
பின்னர் தர்ணா போராட்ட குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், "இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது தாயும், சிகிச்சை பராமரிக்கப்பட்டு வந்த பெண் குழந்தையும் இறந்த சம்பவமும், அதனால் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டதும் மருத்துவமனை வளாகத்தையே பரபரப்பாக மாற்றியது.