திருவள்ளூரில் 500-க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர்-கள் ஊர்வலம்; ஆட்சியரும் பங்கேற்பு…
திருவள்ளூர்
திருவள்ளூரில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க இருப்பதையொட்டி 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் எம்.ஜி.ஆர் போல வேடமணிந்து ஊர்வலம் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் வருகிற 2-ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி திருவள்ளூரில் பள்ளி மாணவர்கள் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமை தாங்கியும், கொடியசைத்தும் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுடன் தானும் இந்த ஊர்வலத்தில் நடந்து சென்றார்.
திருவள்ளூரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதனை ஆட்சியர் பார்வையிட்டார்.
இதில் வெற்றி\ப் பெறுபவர்களுக்கு வருகிற 2-ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த ஊர்வலத்தில் ஆட்சியருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குமார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அருணா, திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி மற்றும் திரளான அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.