வெள்ளத்தில் மூழ்கிய 200-க்கும் மேற்பட்ட வீடுகள்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு...
நாமக்கல்
காவிரி ஆற்றின் இருபக்கமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரப் பகுதியில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. முன்னரே பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரத்து 170 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 75 ஆயிரம் கன அடியாகவும் இருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கை கண்டு ஆனந்த களிகூர கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். இதனால் கரையோரப் பகுதிகளி அசம்பாவிதங்கள் எதாவது நடந்துவிடுமோ? என்று அச்சத்தில் ஏராளமான காவலாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆறு பொங்கி வருகிறது. இங்குள்ள ஆவரங்காடு பகுதியில் ஓடும் காவிரி ஆற்றை காண பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆற்றின் அருகில் இருக்கும் 13 அடி உயர முனியப்பன்சாமி சிலையே இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
காவிரி ஆற்றில் இருபக்கமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வீடுகளில் இருந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுவிட்டது.