வரும் 24-ஆம் தேதி ஆரோவிலுக்கு வருகிறார் பிரதமர் மோடி; பலத்த பாதுகாப்புடன் தயாராகிறது தியான மையம்...
விழுப்புரம்
ஆரோவிலுக்கு வருகிற 24-ஆம் தேதி பிரதமர் மோடி வருவதால் பலத்த பாதுகாப்புடன் மாத்திரி மந்திர் தியான மையம் தயாராகிறது. இதனை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரின் பொன் விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். ஆரோவில் மாத்திரி மந்திர் தியான மையத்திற்கு வரும் பிரதமர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
அங்குள்ள தியான மண்டபம், சாவித்ரி இல்லத்தில் வெளிநாட்டினருடன் சந்திப்பு, பாரத் நிவாஸில் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
இதனையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
ஆரோவில் பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. சுரேஷ்குமார், ஏடிஎஸ்பி வீரபெருமாள், டிஎஸ்பி இளங்கோவன், வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் மாத்திரி மந்திர் தியான மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பார்வையிட்டனர்.
ஹெலிகாப்டர் இறங்கு தளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு ஆரோவில் பவுண்டேஷன் செயலர் மோகன் வர்கீஸ் சுந்தர், சார்பு செயலர் சீனுவாசமூர்த்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.