வெளிநாட்டைச் சேர்ந்த அரிய வகை கிளி காணவில்லை – வண்டலூர் பூங்கா அதிகாரி புகார்…
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 16 நாள்களுக்கு முன்பு காணாமல் போன வெளிநாட்டைச் சேர்ந்த அரியவகை கிளி காணவில்லை என்று பூங்கா அதிகாரி நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு கடந்த 10–ஆம் தேதி ஊழியர்கள் கூண்டில் இருக்கும் பறவைகளுக்கு உணவு அளிக்க சென்றிருந்தனர். அந்த பணியின் போது தனியாக கூண்டில் வைக்கப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ‘மொலுகான்’ கொண்டைக்கிளி காணாமல் போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர், பூங்கா அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் தேட ஆரம்பித்தனர். கடந்த 16 நாள்களாக பூங்காவில் தொடர்ந்து தேடிப் பார்த்தும் அந்தக் கிளி கிடைக்கவில்லை,
பின்னர், ஓட்டேரி காவல் நிலையத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா வனச்சரக அலுவலர் பிரசாத், “வெளிநாட்டைச் சேர்ந்த அரியவகை கிளியை காணவில்லை” என்று நேற்று புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கிளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இரவு நேரத்தில் கூண்டை உடைத்து மர்ம நபர்கள் கிளியை திருடிச் சென்றுவிட்டனரா? என்ற கோணத்திலும் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.