குடும்பத்திற்கு அரைக்கிலோ ப்ளீச்சிங் பவுடர்… அறிவித்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்!! | #medicalcamp
#Medicalcamp குடிசை பகுதிகளில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு அரைகிலோ என்ற வகையில் ப்ளீச்சிங் பவுடர் தருகிற பணி இன்று துவங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நின்றுதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் மக்கள் முதல் தளத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் அவர்களை அதிகாரிகள் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நீட் இராட்சத மோட்டர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதற்கிடையே மழை, வெள்ளம் காரணமாக மக்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். பல தரப்பு மக்களுக்கும் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 5,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் மருத்துவமுகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் மருத்துவமுகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரே நாளில் இவ்வளவு மருத்துவமுகாம் என்பது இதுவே முதல் முறை என்கிற வகையில் மருத்துவமுகாம் நடைபெற தொடங்கியிருக்கிறது என்றும் மக்கள் நல்வாழ்வுதுறையை பொறுத்தவரை மழைக்கால சிறப்பு முகாம்களுக்கு தேவையன மருந்து மாத்திரைகள், மூன்று மாதத்திற்கு தேவையான அளவிற்கு கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மழைக்காலங்களில் மக்களுக்கு இயற்கையாக வருகிற நோய்களான காய்ச்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு என பல்வேறு உபாதைகளிலிருந்து மக்களை காப்பாற்றத் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல் படி மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குடிசை பகுதிகளில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு அரைகிலோ என்ற வகையில் ப்ளீச்சிங் பவுடர் தருகிற பணி இன்று துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் நான்கு லட்சத்திற்கு அதிகமான க்ளோரின் மாத்திரைகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடந்து நாளை 8வது மெகா தடுப்பூசி முகாம்கள் 50,000 இடங்களில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணிகளில் முதல் தவனை தடுப்பூசி 72 சதவீதமும், இரண்டாம் தவனை தடுப்பூசி 33 சதவீதம் என்கிற அளவிற்கு உயர்ந்து உள்ளது. தற்போது 69 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 70 லட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசி என்கிற அளவில் இருக்கிறார்கள். இதை அடுத்து 2வது தவனைக்காக காத்திருக்கும் 70 லட்சம் பேரை அழைத்து முகாம்களில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி அவசியம் என்பதன் காரணமாக இத்தகைய கடும் மழை பொழியும் சூழலில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.