அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை முன்பு சில மருந்துகளை எடுத்திருக்கக் கூடாது என்பதால், பைபாஸ் அறுவை சிகிச்சை தாமதமானது. அதன் தொடர்ச்சியாக, அவருக்கு நேற்று அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெற்றது. காவேரி மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏர்.ஆர்.ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு செந்தில் பாலாஜிக்கு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தது.
விதவிதமான உணவுகள்: ரசித்து சாப்பிட்ட பிரதமர் மோடி!
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு நான்கு இடங்களில் பைபாஸ் கிராஃப்ட் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார். காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.