தஞ்சை தேர் விபத்து விவகாரம்... அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம்!!
அரசுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் தஞ்சை தேர் திருவிழா நடைபெற்றுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் தஞ்சை தேர் திருவிழா நடைபெற்றுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் இங்கே விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்பர் மடத்துக்குச் செல்வதற்காகச் சாலையின் வளைவில் தேரை இழுக்கும் போது அருகே இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் இறங்கியுள்ளது.
தேர் நின்ற இடத்துக்கு மேற் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பி சென்றுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அரசுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் தஞ்சை தேர் திருவிழா நடைபெற்றுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் தஞ்சை தேர் திருவிழாவை ஊர் மக்கள் நடத்தியுள்ளனர். சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர், களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்திருவிழாவும் அல்ல, அது தேரும் அல்ல, அது சப்பரம். திருவிழாவை ஊர் கிராம மக்களே ஒன்று கூடி நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.