தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்... வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயிலில் அமைச்சர் பிடிஆர் சாமி தரிசனம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்ய தேனிக்கு சென்ற அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.
![Minister PTR special worship at Kaumariamman Temple in Theni on the occasion of Tamil New Year KAK Minister PTR special worship at Kaumariamman Temple in Theni on the occasion of Tamil New Year KAK](https://static-ai.asianetnews.com/images/01hvdpzy2n5py4dnwc1hy8zhc0/whatsapp-image-2024-04-14-at-12-38-13-pm_363x203xt.jpg)
கௌமாரியம்மன் சிறப்பு வழிபாடு
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிற்ப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாகிய தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயிலில் இன்று சித்திரை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு வழிபாட்டில் பிடிஆர்
இந்த வழிபாட்டில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் கம்பம் செல்லும் வழியில் நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் கோவிலுக்கு வந்து அவருக்கு இந்து அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கோவிலில் கருவறையில் தங்க கவசத்துடன் வீற்றிருக்கும் அருள்மிகு கௌமாரியம்மனை பக்திப் பரவசத்துடன் தரிசித்தார்.