தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில், சுமார் 40 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளி விடுமுறை நாட்களை நீட்டிக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய காரணத்தால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர். அப்போது கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கியுள்ளார். அதன் படி,
- இடைநிற்றலைக் கண்காணித்து, இடைநிற்றல் இருப்பின் அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.
- மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
- இக்கல்வியாண்டில் கல்வி அலுவலர்கள் அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
- முந்தைய கல்வியாண்டை விட, இக்கல்வியாண்டில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.
- உடனடித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
- மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும்.
- மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்திட வேண்டும்.
- உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும்.
- மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்போம்.
