நிலுவையில் உள்ள பல இலட்சம் ரூபாயை கேட்டு பால் உற்பத்தியாளர்கள் முற்றுகைப் போராட்டம்...
வேலூர்
நிலுவையில் உள்ள பல இலட்சம் ரூபாயை கேட்டு வேலூரில் உள்ள சோளிங்கர் கூட்டுறவு சங்கத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 4000 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பாலுக்கு பணப்பட்டுவாடா செய்வது வழக்கம்.
ஆனால், கடந்த 7 வாரங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு பல இலட்சம் ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
பணம் வழங்காததால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணியளவில் சோளிங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்ததும், தற்போது நடந்து முடிந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெருமாள், சங்க அலுவலகத்திற்கு சென்று பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, "தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிர்வாக பொறுப்பை ஒப்படைக்காததால் பணம் தரமுடியவில்லை. உங்கள் பணம் அனைத்தும் வங்கியில் உள்ளது. உங்கள் கோரிக்கையை உடனடியாக மாவட்ட பால்வள துணை பதிவாளரிடம் கூறி பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அதனை ஏற்ற பால் உற்பத்தியாளர்கள், "கிராமங்களுக்கு சென்று பால் கொள்முதல் செய்துவரும் ஊழியர்களை வேறு கிராமங்களுக்கு மாற்றம் செய்யாமல், அவர்கள் ஏற்கனவே பால்கொள்முதல் செய்யும் கிராமங்களுக்கே சென்றுவர அனுமதிக்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
"அந்த கோரிக்கையையும் உடனடியாக நிறைவேற்றப்படும்" என்று பெருமாள் தெரிவித்தர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். சுமார் 2½ மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.