நாளை முதல் பால் விலை உயர்வு - அதிரடி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
நாளை முதல் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த- அதிரடி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக பால் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. தினமும் 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனம், தற்போது நாள் ஒன்றுக்கு 24 லட்சம் லிட்டர் தான் கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கடந்த 3 மாதத்தில் சுமார் 6 லட்சம் லிட்டர் வரை ஆவின் கொள்முதல் குறைந்துள்ளது.
இந்நிலையில் ரூ.24க்கு பால் கொள்முதல் செய்து வந்த தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி தற்போது ரூ.28க்கு கொள்முதல் செய்யத்தொடங்கின. கொள்முதல் விலை உயர்ந்ததால், பால் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்தன.
இதையடுத்து தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை நாளை முதல் ரூ.2 உயர்த்தி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.36ல் இருந்து ரூ.38 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40ல் இருந்து ரூ.42 ஆகவும், சிறப்பு சமன்படுத்தப்பட்ட பால் ரூ.38ல் இருந்து ரூ.40 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்புசத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.52ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்கிறது. ஒரு லிட்டர் தயிர் விலை ரூ.50ல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பால் கொள்முதல் விலை, விற்பனை விலை இரண்டையும் தமிழக அரசு நிர்ணயிக்கவேண்டும். ஆவின் பாலுக்கு மட்டும் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசு நிர்ணயிக்கிறது. பால் விலையில் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் ஏழை எளிய மக்கள் அனைவரும் பாலை வாங்க முடியும்.
இந்த திடீர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இனியாவது பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு நிர்ணயிக்கும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்றனர்.