mgr statue removed from sengundram bus stop

செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே இருந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-ன் சிலை அகற்றப்பட்டுள்ளதற்கு அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்து செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை கடந்த 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 

தற்போது செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில், செங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, சாலையை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் சிலை அகற்றப்பட்டுள்ளது.

இன்று காலை, எம்.ஜி.ஆர். சிலை இல்லாததைக் கண்ட அதிமுக அணிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். 

அப்போது, எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது குறித்து அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்தனர். இதனை அடுத்து, செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.