ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை; ஒரேநாளில் இரண்டே முக்கால் இலட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாம்...
திருப்பூர்
திருப்பூரில் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஒரேநாளில் இரண்டே முக்கால் இலட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது என்றும் இளைஞர்கள். கல்லூரி மாணவ , மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத் தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் விழா நேற்று காலை திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள திரு ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியது.
இந்த விழாவிற்கு தலைவர் மேகநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சந்திரமோகன், கௌரவத் தலைவர் யாஷ் கணேசன், துணைத் தலைவர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், துணைச் செயலாளர்கள் ராம்குட்டி, சிவலிங்கம், ஆலோசகர்கள் சந்திரன், ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத் திருமண மண்டபம் அருகில் சிவசுப்பிரமணிய செட்டியார் வீதியில் உள்ள மன்ற அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
ஆண், பெண் பனியன் தொழிலாளர்கள், கல்லூரி மாணவ - மாணவிகள், ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். அனைவருக்கும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த விண்ணப்பத்தில் உறுப்பினராக சேர விரும்புபவரின் பெயர், பிறந்த தேதி, வயது, மின்னஞ்சல், முகவரி, கிராமம், வார்டு, ஊராட்சி, நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியம், மாவட்டம், தாலுகா, வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினராக இருந்தால் மன்றத்தின் பதிவு எண் விவரம், ஏதேனும் கட்சியில் உறுப்பினராக இருந்தால் அந்த கட்சியின் பெயர், பரிந்துரைப்பவரின் பெயர், மன்றத்தின் பெயர், பதிவு எண், மன்ற விலாசம், செல்போன் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளாக, "உறுப்பினர்கள் மன்றத்தின் நற்பெயருக்கு எந்தவித களங்கம் வராத வகையில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும்.
மன்றத்தின் அறிவுரை, உத்தரவுகளுக்கு பணிந்து நடக்க வேண்டும்.
தலைமை மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் யாரும் மன்ற நிர்வாக பொறுப்புகளை நியமிக்கக் கூடாது.
தலைமை மன்றத்தின் முடிவே அனைத்துக்கும் இறுதியானது" என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"திருப்பூர் மாநகரில் ஒன்றே கால் இலட்சம் விண்ணப்பங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது. இதுபோல ஊத்துக்குளி, வெள்ளகோவில், தாராபுரம், பல்லடம், காங்கேயம், பொங்கலூர், உடுமலை, அவினாசி என மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்களை இளைஞர்கள், ரசிகர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ஒரேநாளில் மொத்தம் இரண்டே முக்கால் இலட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது" என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர தலைமை ரஜினி மன்றங்களின் சார்பில் மனோகரன் (ஊத்துக்குளி), கார்த்திகேயன் (வெள்ளகோவில்), துரை கார்த்திகேயன் (தாராபுரம்), பாலகிருஷ்ணன் (பல்லடம்), செல்வன் (காங்கேயம்), மயில்சாமி (பொங்கலூர்), அப்துல் சலீம் (உடுமலை), சுந்தரம் (அவினாசி) உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.