ஆலம்பாறை கோட்டையில் உள்ள தீவுக்குள் செல்ல கடல் நீரைக் கடக்க முயன்ற புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மாயமாயினர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கம் அருகேயுள்ளது ஆலம்பாறை கோட்டை. இந்தக் கோட்டையானது வரலாற்று சிறப்புமிக்கது.

இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனைப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இப் பகுதிக்கு, புதுச்சேரியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் படித்து வரும் புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (21), ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த கௌதம்பிள்ளை (21), விழுப்புரம் மாவட்டம், மதகடிப்பட்டைச் சேர்ந்த அஜய் (21) ஆகியோர் ஆலம்பரை கோட்டையைச் சுற்றிப்பார்க்க நேற்று வந்தனர்.

அவர்கள் அனைவரும் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கோட்டையின் மதிலோரம் உள்ள கரைப் பகுதியில் இருந்து முகத்துவாரம் வழியாக சிறிய தீவுக்குச் செல்ல கடல் நீரில் கடந்து சென்றனர்.

கடல் நீரில் சென்றவர்கள் திரும்பவில்லை. இதை அறிந்த மாணவர்களுடன் வந்த நண்பர்கள், சூனாம்பேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சூனாம்பேடு உதவி ஆய்வாளர் காசி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கடல் அலைகளால் மாணவர்கள் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனரா? என்பது குறித்து சூனாம்பேடு காவலார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாணவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.