மகப்பேறு விடுப்பும்… வீட்டு வாடகைப்படியும்… ‘நச்’ விளக்கம் சொன்ன தமிழக அரசு
மகப்பேறு விடுப்பின் போது வீட்டு வாடகைப்படி உண்டா, இல்லையா என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: மகப்பேறு விடுப்பின் போது வீட்டு வாடகைப்படி உண்டா, இல்லையா என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருமணம் ஆன அரசு பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வரையில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு இந்த விடுமுறையானது 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் இந்த விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தி அறிவித்தது. அதனை தொடர்ந்து அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி கிடையாது என்று ஒரு தகவல் பரவியது. இது அரசு பெண் ஊழியர்களுக்கு பெரும் குழப்பமாக மாறியது.
இந் நிலையில் மகப்பேறு விடுப்பு என்பது சிறப்பு சலுகை, எனவே அந்த விடுப்பு காலம் முழுவதும் வீட்டு வாடகைப்படி தரப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ஆணையில் வெளியிட்டு விவரம் வருமாறு:
அடிப்படை விதிகளில் விதி எண் 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் (instruction) 4(b)ல் ஒரு அரசு ஊழியர் விடுப்பில் இருக்கும் போது (மகப்பேறு விடுப்பு உள்பட) ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி தகுதி உடையவர் ஆவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அரசாணை (நிலை) எண்.89, மனிதவள மேலாண்மைத்துறை நாள் 9.9.2021ன்படி அடிப்படை விதி 101(a)ன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு ஒரு சிறப்பு சலுகை என்பதால் மகப்பேறு விடுப்பு காலம் முழுமைக்கும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் (instruction) 4(b)ல் ஒரு அரசு ஊழியர் விடுப்பில் இருக்கும் பொழுது ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து 6 மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி என்று குறிப்பிட்டிருந்தது. அதாவது, மகப்பேறு விடுப்பு காலம் முழுமைக்கும் தடையின்றி வாடகைப்படி கிடைக்கும் என்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.