ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா; சிறப்பு அபிஷேகத்தோடு தீர்த்தவாரியும் நடந்தது...
பெரம்பலூர்
பெரம்பலூரில், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடந்த மாசி மக பெருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகமும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதில் ஏராளமான அடியார்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் மாசி மக பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றதையடுத்து நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. காலை 5 மணிக்கு கோமாதா பூஜை நடைப்பெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையாக வாசனை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து உற்சவரை கோவிலில் இருந்து ஊர்வலமாக மகா மக குளத்திற்கு எடுத்து வந்தனர்.
பின்னர், மகா மக குளத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான அடியார்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகளில் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.