உயர்த்திய வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்...
கரூர்
உயர்த்திய வீட்டு வரியை குறைத்து மீண்டும் பழையபடியே வரி வசூலிக்க வேண்டும் என்று கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ரத்தினவேலு முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "கரூர் நகராட்சி சார்பில் வீட்டு வரியை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து மீண்டும் பழையபடியே வீட்டுவரியை வசூலிக்க வேண்டும்,
புதிதாக போடப்பட்ட குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்.
கோடிக்கணக்கில் செலவு செய்து குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடப்பதாக அதிகாரிகள் கூறும் நிலையில், நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரயில்வே கேட் - உழவர் சந்தை வரையுள்ள புறவழிச்சாலையை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்,
தந்தை பெரியார் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்து இரவு நேரங்களில் அனைத்து மின்விளக்குகளும் எரிய ஏற்பாடு செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அஜித்குமார், ராஜா, தண்டபாணி, ராஜாங்கம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்.