marriage to foriegn lovers in sirkali
இந்து மதம் மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்ட வெளிநாடுகளைச் சேர்ந்த காதலர்கள் இருவர் தமிழகத்தில் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
பின்லாந்தைச் சேர்ந்தவர் ஜுகா. யோகா ஆசிரியரான இவர் சுற்றுலாவுக்காக இந்தியா வந்திருக்கிறார். இந்தியாவில் உளள பல கோவில்களுக்குச் சென்று வழிபட்ட இவர் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
ஜுகா மத்திய பிரதேச மாநிலம் ஜெபல்பூருக்கு வந்தபோது, அங்கு மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த வோங்வெய்கிட் என்பவரை சந்தித்தார். இருவரும் சந்தித்துக் கொண்டபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
ஏறகனவே வோங்வெய்கிடும் இந்த மதம் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் நேசிப்பவராக இருந்ததால், இருவரும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்த நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள சித்தர்புரத்தில் உள்ள சித்தர் பீடத்துக்கு, நேற்று வந்த வெளிநாட்டு காதலர்கள், சித்தர்களை வழிபட்டனர்.
பின்னர், கோபூஜை மற்றும் முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்திய இசையுடன், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டனர்.
தாலி கட்டித் திருமணம் செய்து கொண்ட வெளிநாடு காதலர்களை சீத்தர் பீடத்தில் இருந்த பக்தர்கள் வாழ்த்தி ஆசி வழங்கினர். பின்னர் புது மணத் தம்பதிகள் வாழ்த்திய அனைவருக்கும் விருந்து அளித்து உபசரித்தனர்.
