46 வயது பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய முடிவு….அற்புதம்மாள் அசத்தல் பேட்டி….
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் விடுதலை ஆகியுள்ள பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தனது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில், பேரறிவாளனை ஒரு மாத பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து பேரறிவாளன், நேற்று ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தபோது, அவரை வரவேற்க பெரும் கூட்டம் காத்திருந்ததது. தந்தை குயில்தாசன், தாய் அற்புதம்மாள், சகோதரி அன்புமணி மற்றும் உறவினர் பேரறிவாளனை உணர்ச்சிப் பெருக்குடன் வரவேற்றனர்.
26 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு அவர் வருவதால் அவரைக் காண ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். அவரது வருகையை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் 46 வயதாகும் தனது மகன் பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிவதாக அவரது அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
தற்போது பரோலில் வெளிவந்திருக்கும் பேரறிவாளன், விரைவில் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்று தான் நம்புவதாகவும், எனவே அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய உள்ளதாகவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.