ராமதாஸ் வீடு உள்பட பல பகுதிகளில் கருப்புகொடி ஏற்றம் - மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டுறாங்கலாம்...
விழுப்புரம்
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீடு மற்றும் அரசியல் பயிலரங்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு, தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது. அதனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் முதல் கட்டமாக 30-ஆம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று காலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீடு மற்றும் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் பா.ம.க.வினர் தங்களது வீடுகளிலும், புறவழிச்சாலையில் உள்ள பெயர் பலகையிலும் கருப்பு கொடி ஏற்றினர்.
எலவனாசூர்கோட்டையில் பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெகன் தலைமையில் கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிப்பது, அதற்கு அழுத்தம் கொடுக்க தவறிய மாநில அரசை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வையுங்கள் என்று கூறி துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வினியோகம் செய்தனர்.
இதேபோல விழுப்புரம், செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், கள்ளக்குறிச்சி மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் தங்களது வீடுகளில் நுழைவுவாயில் முன்பு கருப்புக்கொடியை ஏற்றிவைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்டினார்.