ராகுலின் பாரத் நியாய யாத்திரைக்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுப்பு: இடத்தை மாற்றிய காங்கிரஸ்!
ராகுலின் பாரத் நியாய யாத்திரையை இம்பாலில் இருந்தது தொடங்க மணிப்பூர் அரசு அனுமதி மறுத்துள்ளது
![Manipur government declines permission for Rahul Gandhi Bharat Nyay Yatra smp Manipur government declines permission for Rahul Gandhi Bharat Nyay Yatra smp](https://static-ai.asianetnews.com/images/01hjmxpd7mvr0qpez0p5qhae2y/rahul-gandhi_363x203xt.jpg)
மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில் ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்த நிலையில், பாரத் நியாய யாத்ரா நடைபயணமானது ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி நிறைவடைகிறது.
சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையை மணிப்பூர் தலைநகர் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து தொடங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கான தரை அனுமதியை வழங்க மணிப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி ராகுலின் யாத்திரைக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்க, கட்சி நிர்வாகிகள் குழுவுடன் இன்று சந்தித்த அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எம்எல்ஏவுமான மேகசந்திரா, இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் தெரிவித்த மேகசந்திரா, தௌபல் மாவட்டம் கோங்ஜோமில் உள்ள ஒரு தனியார் இடத்திற்கு யாத்திரை தொடங்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது என்றார்.
குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி!
முன்னதாக, ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி வழங்குவது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து அறிக்கைகளைப் பெற்ற பிறகு அது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தெரிவித்திருந்தார்.
“மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ராகுல் காந்தியின் பேரணிக்கு அனுமதி அளிப்பது தீவிர பரிசீலனையில் உள்ளது. பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து அறிக்கைகளை பெற்று வருகிறோம். அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்ற பிறகு உறுதியான முடிவு எடுப்போம்.” என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.