குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது விபரீதம்... ஏரியில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பலி!
குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது ஏரியில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது ஏரியில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணலி தீயம்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திகேயன் (17). மணலில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். திருவொற்றியூர் பூங்காவனபுரம் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (27). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பானு. கார்த்திகேயன் குடும்பமும், நாகராஜ் குடும்பமும் உறவினர்கள் ஆவார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜ் அவரது மனைவி பானு ஆகியோர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் கார்த்திகேயன் மற்றும் நகராஜ் குடும்பத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்குன்றம் அருகே உள்ள சூரியன் பகவான் கோவிலுக்கு சென்றுவிட்டு மதியம் மணலியை அடுத்த அரியலூர் அருகே உள்ள ஏரிக்கு சென்றனர்.
அங்கு கார்த்திகேயன், நாகராஜ் இருவரும் ஏரியில் குளித்துக்கொண்டிருக்க மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திகேயன், நாகராஜ் இருவரும் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கிக்கொண்டனர். இதைப் பார்த்து கரையில் இருந்த உறவினர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து மணலி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மணலி, செங்குன்றம் ஆகிய பகுதியில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் இருவரின் உடலை மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.