a man died when vao seeks bribe for chaning patta in his name

சென்னை துரைப்பாக்கம் அருகே, பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ., ரூ.50 ஆயிரம் கேட்டதால், விண்ணப்பதாரர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, அடையாறு, ஐஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் அனந்தகுமார் (50). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாராம். இவரது மனைவி பெயர் பிரேமலதா (47). இவர்களுக்கு, ஈஞ்சம்பாகத்தில் உள்ள நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி, ஈஞ்சம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். 

அவர்களது விண்ணப்பத்தை ஏற்ற விஏஓ., இளங்கோ, பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், தனக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என அனந்தகுமாரிடம் கேட்டாராம். ஆனால், இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனந்த குமார், நேற்று மாலை மீண்டும் தனது மனைவியுடன் விஏஓ அலுவலகத்துக்கு சென்றார். அங்கே இளங்கோவைப் பார்த்து, தங்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறினார்.

ஆனால், பணம் பெறாமல் தன்னால் ஏதும் செய்ய முடியாது என விஏஓ., இளங்கோ கட்டாயமாகத் தெரிவித்துவிட்டாராம். இதனைக் கேட்டபோது, பெரிதும் வருத்தம் கொண்ட அனந்தகுமாருக்கு அப்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் அங்கேயே கீழே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரேமலதா, அனந்த குமாரைக் கண்டு கதறி அழுதார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அனந்தகுமாரை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலாங்கரை போலீசார், அனந்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகார் அளிக்கப் பட்டதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.