man arrested who held Special Pooja for snake

கடலூர்

கடலூரில் பாம்புக்கு சிறப்பு பூஜை நடத்தியவரை வனத் துறையினர் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் வசமாக சிக்கினார்.

கடலூர் மாவட்டம், துரைசாமி நகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒருவரது சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்தப் பூஜையில் பாம்பை நாகராஜாவாக வைத்து அதற்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனை சிலர் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். 

இந்த விடியோ வனத் துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து, கடலூர் மாவட்ட வனத் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிந்து இது தொடர்பாக விசாரணையை நடத்தினர்.

அந்த விசாரணையில், பாம்புக்குச் சிறப்பு பூஜை செய்த கடலூர் ஆணைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் (45) என்பரை வனத் துறையினர் நேற்று கைது செய்தனர். 

அதன்பின்னர், அவரை குற்றவியல் நடுவர் எண். 2 நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், பாம்பை பூஜைக்குக் கொண்டுவந்த பாம்பாட்டியை தேடி வருகின்றனர். 

முன்னதாக, இந்த பூஜையில் யானை பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கும் உரிய அனுமதி பெறவில்லையாம். இது தொடர்பாகவும் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.