அனல்மின் நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.14 இலட்சம் மோசடி செய்தவர் கைது...
ஈரோடு
ஈரோட்ட்டில், அனல்மின் நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 இலட்சம் மோசடி செய்தவரை காவலாளர்கள் கைது செய்து விசாரித்து வருகின்ன்றனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ளது மாத்தூர் பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு இராஜகணபதி கோவில் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சசிக்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் பார்வதியிடம் உங்களுடைய இரண்டு மகள்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர், பார்வதியிடம் ரூ.14 இலட்சம் தந்தால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் அதிகாரி வேலை வாங்கிவிடலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி பார்வதியும் ரூ.14 இலட்சத்தை சசிக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், அவர் வேலை வாங்கி தரவில்லை. பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பார்வதி, திருச்செங்கோட்டில் உள்ள சசிக்குமார் வீட்டுக்கு சென்றார். அப்போது சசிக்குமார் மற்றும் அவருடைய உறவினர்கள், பார்வதியை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர்.
மேலும். பார்வதியிடம் இருந்து வாங்கிய ரூ.14 இலட்சத்தை தரமுடியாது என்றும் கூறி உதாசினப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பார்வதி பவானி துணை காவல் கண்காணிப்பாளர் சார்லசிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து சசிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.