மனித சமுதாயத்தை ஒருதாய் மக்கள் என்று போதித்த மகான் இராமனுஜர் – புகழ்ந்து தள்ளிய ஒபிஎஸ்…
திருப்பெரும்புதூரில் இராமானுஜர் பற்றிய புத்தகம் வெளியிட்ட ஒபிஎஸ், “மனித சமுதாயத்தை ஒருதாய் மக்கள் என போதித்த மிகப்பெரிய மகான் இராமனுஜர்” என்று புகழ்ந்து தள்ளினார்.
இராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு திரு அவதாரத் திருவிழா நடைப்பெற்றது.
இதனை முன்னிட்டு லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் “அற்புத இராமானுஜர்” என்றத் தலைப்பில் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கண்காட்சி மற்றும் இராமானுஜர் குறித்தத் தொடர் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
திருபெரும்புதூர் அயக்ரீவ வித்யாசரம் பள்ளியில் கடந்த 27-ஆம் தேதி முதல் தொடங்கிய கண்காட்சியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை பார்வையிட்டார். அங்கு "இராமானுஜரின் தமிழ்த்தொண்டு' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“இராமானுஜர் எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல் அனைத்துச் சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ வலியுறுத்திய சமூக சீர்திருத்தவாதி. மனித சமுதாயத்தை ஒருதாய் மக்கள் என போதித்த மிகப்பெரிய மகான் இராமானுஜர்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் அப்பன் பரகால இராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், மா.பா.பாண்டியராஜன், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்.பி. அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் மணிமாறன், ஓம்சக்தி சேகர், நிர்மலா பெரியசாமி, லிப்கோ நிறுவனத்தின் தலைவர் விஜயசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.